சென்னை: பட்டாசுக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் 19,600 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தீபாவளியன்று மட்டும் சென்னையில் நூறு டன் அளவிலான குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
வழக்கமாக சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து நாள்தோறும் 6,850 மெட்ரிக் டன் கழிவுகள் அப்புறப்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், பட்டாசுக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில், 19,600 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“தீபாவளி தொடங்கி மூன்று நாள்களில் பட்டாசுக் கழிவுகளை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 275 டன் கழிவுகளை அகற்ற இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
“இரண்டு விதமாக பட்டாசுக் கழிவுகளை மாநகராட்சி அப்புறப்படுத்தி வருகிறது. நேரடியாக வீடுகளுக்குச் சென்று பட்டாசுக் கழிவுகளைத் தனியாகப் பிரித்து தரும்படி கேட்கப்படும். தெருக்களில் பட்டாசுகள் வெடித்ததால் குவிந்துள்ள கழிவுகள் தனியாக அகற்றப்படும்,” என்றார் ஆணையர் ராதாகிருஷ்ணன்.

