சென்னை: அனுமதிக்கப்பட்டநேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் மட்டும் 580 வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது.
தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என மொத்தமாக இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதைச் சுட்டிக்காட்டி தமிழகக் காவல்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தது.
தீபாவளி வேளையில், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அனுமதிக்கப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனப் பொருள்களால் தயாரிக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகள் மட்டுமே விற்கப்படவும் வெடிக்கப்படவும் வேண்டும் என்பது காவல்துறையின் முக்கிய அறிவுறுத்தல் ஆகும்.
இந்த அறிவுறுத்தல்களை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் மீறி பட்டாசுகள் வெடித்த 580 பேர் மீது வழக்குப் பதிவானது. இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன.

