திண்டுக்கல்: சேமியா பொட்டலத்தில் தவளை ஒன்று கிடந்ததாக எழுந்த புகாரை அடுத்து, திண்டுக்கல்லில் உள்ள சேமியா தயாரிப்புக் கூடங்களில் வியாழக்கிழமை (16.11.2023) அதிகாரிகள் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.
தேவகோட்டையைச் சேர்ந்த பூமிநாதன் என்பவர், அளித்த புகாரின் அடிப்படையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், திண்டுக்கல்லில் இ.பி.காலணி, செட்டிநாயக்கன்பட்டி, சிட்கோ, மேட்டுப்பட்டி, பாடியூர், லட்சுமணபுரம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் உணவுப் பொருள் தயாரிப்புக் கூடங்களில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, புகாரில் தெரிவிக்கப்பட்ட வரிசை எண் கொண்ட சேமியா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த எண் வரிசைப் பொட்டலங்களை விற்பனை செய்யக்கூடாது அந்த நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும், அங்கு தயாரிக்கப்படும் பொருள்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சென்னையில் உள்ள கிண்டி உணவு பகுப்பாய்க் கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். பகுப்பாய்வின் முடிவறிக்கை கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.