பெரம்பலூர்: தமிழகம் அமைதியான மாநிலம் என்பதால்தான், எப்போதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது என்று தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு கூறினார்.
பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் வாக்களித்து அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில் சனிக்கிழமை (நவம்பர் 18) நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், தமிழகத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுமா என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளிக்கும்போதே, தமிழகம் அமைதியான மாநிலம் என்று சத்யபிரதா சாஹு குறிப்பிட்டார்.
“அமைதியான மாநிலம் என்பதால்தான், எப்போதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஒரு வாக்காளரின் பெயர் இரண்டு இடங்களில் இடம்பெற்றிருந்தால், அவர் எங்கு வாக்களிக்க விரும்புகிறார் என்ற ஒப்புதல் பெற்ற பிறகே, மற்றோர் இடத்தில் உள்ள பெயர் நீக்கப்படும்.
“தமிழகம் முழுவதும் புதிய வாக்காளர்களை சேர்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, கல்லூரிகளில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்படுவதுடன், இதுகுறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது,” என்றார் சத்யபிரதா சாஹு.
18 வயது நிறைவடைந்த அனைவருமே வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட அவர், ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்கு இதுவே முதல் கட்ட நடவடிக்கை என்றார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.
தேர்தல் கூட்டணி தொடர்பான மறைமுக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ஊடகங்கள் பல்வேறு செய்திகள் வெளியான வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது என சமூக ஊடகங்களில் ஒரு தகவல் உலா வந்தது.
இந்நிலையில் ஒரே கட்டமாகத்தான் நடைபெறும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.