விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் மலைக்கோயில் மேலே செல்வதற்கு மூன்று பாதைகள் உள்ளன.
படிகள் மூலம் செல்லும் பாதையும் யானை அடிப் பாதை ஒன்றும் இருப்பதோடு வாகனங்களில் செல்ல தார் சாலைப் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தார் சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த சுவாமிகள் உருவத்திலான பல்வேறு மண் சிலைகளை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர்.
கந்த சஷ்டி விழா நடைபெற்று வரும் வேளையில் சிலைகள் உடைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சாமி சிலைகளை உடைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு மலைப் பாதை ஓரங்களில் சிசிடிவி கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.