சென்னை: தமிழகத்தில் மீன் வளப் பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதாவின் பெயரைச் சூட்டுவதற்கான மசோதாவுக்கே தமிழக ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அதிமுக, பாஜக இடையே கூட்டணி முறிந்தாலும் ரகசியத் தொடர்பு உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த 2012இல் உருவாக்கப்பட்ட மீன்வளப் பல்கலைக் கழகத்துக்கு, அப்போது எந்த தலைவர் பெயரும் வைக்கப்படவில்லை. 2020ஆம் ஆண்டில்தான் ஜெயலலிதாவின் பெயர் சேர்க்கப்பட்டது.
“மீன் வளப் பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதாவின் பெயரைச் சூட்டுவதற்கான மசோதாவுக்கே ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. ஜெயலலிதா பெயரைச் சேர்ப்பதற்கான மசோதாவுக்கு ஒப்புதலைப் பெற அப்போதைய அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
“ஆளுநர் ஒப்புதல் தராததால், பெயர் மாற்றம் நடை முறைக்கு வரவில்லை. மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயர் சூட்ட ஆளுநர் ஒப்புதல் தராததால் அதற்கு முன் இருந்த பெயரிலேயே மசோதா கொண்டு வரப்பட்டது.
“மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயரைச் சூட்டுவதற்கான மசோதா, ஆளுநரால் நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜெயலலிதா பெயரைச் சூட்டுவதற்கான மசோதாவையும் மீண்டும் நிறைவேற்ற உள்ளோம். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த மசோதா தொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருப்பது முழுக்க முழுக்க அரசியல்,” என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

