சென்னை: சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனரும் புகழ்பெற்ற கண் மருத்துவருமான எஸ்.எஸ்.பத்ரிநாத் செவ்வாய்க்கிழமை (நவ.21) காலை அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 83.
“எண்ணற்ற மக்களுக்குக் கண்ணொளி பாய்ச்சிய பத்ரிநாத்தின் மறைவு மருத்துவத்துறைக்கே பேரிழப்பு” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு நிறுவன மருத்துவமனையாக சென்னை சங்கர நேத்ராலயாவைக் கட்டியெழுப்பிய அவருக்கு பத்மபூஷன், பத்மஸ்ரீ , டாக்டர் பிசி ராய் விருது, சிவிலியன் விருது உள்பட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் உயர்படிப்புகளை முடித்து, இந்தியாவில் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற சேவை நோக்குடன் திரு பத்ரிநாத் சங்கர நேத்ராலயா மருத்துவமனையைத் தொடங்கினார்.
சங்கர நேத்ராலயா மூலம் பத்ரிநாத் ஆற்றி வரும் பணிகளைப் பற்றி அறிந்த புகழ்பெற்ற வழக்கறிஞர் நானி பல்கிவாலா பெரும் நிதியுதவியை அந்த மருத்துவமனைக்கு அளித்ததுடன், தனது சொத்துகள் அனைத்தையும் சங்கர நேத்ராலயாவுக்கு எழுதி வைத்தார்.
இந்த மருத்துவமனையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வசதி குறைந்தோருக்கு கண்புரை அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படுகிறது.