ஈரோடு: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டம் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
“தமிழகக் காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. காங்கிரஸ் கூட்டம் நடந்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. பத்திரிக்கையில் பார்த்த பின்புதான் தெரிந்தது. யாரையும் அழைக்காமல் கூட்டம் நடந்திருக்கிறது. இப்படிக் கூட்டம் நடத்த மர்மம் என்ன என்று தெரியவில்லை” என்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.
“முதலில் எங்களை முன்னாள் தலைவர்கள் என்று சொன்னார்கள். பிறகு மூத்த தலைவர்கள் என்று சொன்னார்கள். இப்போது முடிந்து போன தலைவர்கள் என்று சொல்கிறார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் மாநிலத் தலைவரான இளங்கோவனின் விமர்சனம் உள்கட்சி பூசலை மீண்டும் பொதுவெளியில் அம்பலப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. தேர்தல் தொடர்பான செயல்திட்டங்களை வகுக்க மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மாவட்டத் தலைவர்களைச் சந்தித்துள்ளார்.