ஈரோடு: நீட் தேர்வை ரத்து செய்ய உண்மையாக குரல் கொடுத்து வருகிறோம் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 2,600 திமுக மூத்த நிர்வாகிகளுக்கு, தலா ரூ 10 ஆயிரம் வீதம், பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில், பங்கேற்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர், தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நீட் தேர்வுப் பிரச்சினை என்பது இளைஞரணியின் பிரச்சினை அல்ல. தமிழக மாணவர்களின் பிரச்சினை. நீட் தேர்வினை ரத்து செய்ய உண்மையாக குரல் கொடுத்து வருகிறோம்.
நீட் தேர்வினால் அரியலூர் அனிதாவில் ஆரம்பித்து 21 பேர் இறந்துள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க 50 லட்சம் கையெழுத்து பெற இயக்கம் நடத்துகிறோம். இதுவரை நேரடியாக 16 லட்சம் கையெழுத்தும், போஸ்ட் கார்டு மூலம் 11 லட்சம் கையெழுத்தும் பெற்றுள்ளோம்.
டிசம்பர் 17-ம் தேதிக்குள் 50 லட்சம் கையெழுத்து பெறுவோம். நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதுதான் நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. எடப்பாடி பழனிசாமி கூட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
நீட் தேர்வினை ரத்து செய்ய மசோதா நிறைவேற்றினார். எனவே, நீங்களும் நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்று கையெழுத்திடுங்கள்.
நீட் தேர்வு ரத்தானால், அந்த பெருமையை உங்களுக்கே கொடுத்து விடுகிறேன் என்று நான் சொன்னேன். ஆனால் அவர், இது திமுக நடத்தும் நாடகம் என்று சொல்லிவிட்டார். ஓபிஎஸ். சசிகலாவின் காலை வாரிவிட்ட எடப்பாடி பழனிசாமி நாடகம் பற்றி பேசக்கூடாது என்று கூறினார்.