சென்னை: காலணி, தோல் பொருள்கள் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தமிழக தொழில், முதலீட்டுத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
‘தமிழ்நாடு காலணி, தோல் பொருள்கள் கொள்கை 2022’ வெளியிடப்பட்டதில் இருந்து இதுவரை ரூ.2,250 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
தற்போது, ரூ.1000 கோடி மதிப்புள்ள பொருள்கள் தயாராகி வருவதாகவும் இத்துறை மேலும் விரிவடையும் என்றும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.
“தோல் மற்றும் தோல் அல்லாத காலணி ஏற்றுமதியில் 48% என்ற பெரும் பங்கைக் கொண்டு நாட்டிலேயே, தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்தத் துறை, ஊரகப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து வருகிறது. இதன் மூலம் அவர்களுடைய நிதி நிலைமை மேம்பாடு கண்டுள்ளது,” என்றும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.