‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’: புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு

‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’: புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு

2 mins read
c453b888-4b49-40e8-ba04-e3c4c7aa076e
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம். - படம்: ஊடகம்

சென்னை: மக்களின் கவலையை போக்கி, மகத்தான தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை அவர் அறிவித்துள்ளார்.

இது, ‘மக்களிடம் செல்’ என்று கூறிய காலஞ்சென்ற முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் கனவை நனவாக்கும் திட்டம் என்றும் ‘களத்தில் முதல்வர்’ திட்டத்தின் அடுத்தகட்டமாக மக்கள் குறைகளைக் கேட்டறியும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

“அரசு அறிவித்துள்ள நலத்திட்டங்கள் மக்களைச் சரியாகச் சென்று அடைகின்றனவா. பல்வேறு துறைகளால் வழங்கப்படுகின்ற சேவைகள் மக்களுக்கு முறையாகக் கிடைக்கின்றனவா என்பதை தமிழக முதல்வரே களத்திற்கு நேரடியாகச் சென்று, ஆய்வில் ஈடுபட்டு, அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டு, கள அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தி உரிய அறிவுரைகளை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் களத்தில் முதல்வர் திட்டம்.

“மக்கள் அரசு நலத்திட்டங்களின் முழுப்பலனையும் அடைவதிலுள்ள இடர்ப்பாடுகளைக் களைய வேண்டியதும் அரசு இயந்திரத்தின் முதன்மையான பணி. அரசு இயந்திரம், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன், மக்களைத் தேடிச் சென்று பணியாற்ற வேண்டும்,” என்று அரசு வெளியிட்ட அறிக்கைகயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களையும் அரசையும் இணைக்கும் பாலமாகச் செயல்பட்டு வருபவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் என்றும் ஒவ்வொரு கிராமத்தில் வசிக்கும் மக்களும் தங்கள் கிராம முன்னேற்றத்துக்கும் அரசு தொடர்பாக தனக்கிருக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வை நாடிச் செல்லும் நபர் மாவட்ட ஆட்சித் தலைவர்தான் என்றும் அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“தங்கள் அருகில் இருக்கும் பிற அதிகாரிகள் அன்புக்குரியவராக இருப்பினும், மக்களின் மகத்தான அன்புக்கும் ஆதரவுக்கும் நம்பிக்கைக்கும் உரியவர்களாக மாவட்ட ஆட்சியர்களைப் பார்க்கிறார்கள்.

‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்வர்,” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது, ‘மக்களிடம் செல்’ என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் கனவை நனவாக்கும் திட்டம் ஆகும். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும், ஒரு நாள் வட்ட அளவில்

தங்கி ஆய்வில் ஈடுபட வேண்டும். அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் நலத்திட்டங்கள், சேவைகள் தங்கு தடையின்றி மக்களிடம் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும். நானும், அரசு இயந்திரமும் களத்திற்கு வருகிறோம், குறைகளை கேட்டு, மக்களின் கவலையை போக்கி, மகத்தான தமிழ்நாட்டை உருவாக்குவோம்” என்றார்.

குறிப்புச் சொற்கள்