தஞ்சை: சித்த மருத்துவர் ஒருவர் மனித உடல் உறுப்புகளைச் சட்ட விரோதமாக விற்பனை செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து கேசவ மூர்த்தி என்ற ஆடவரிடம் தஞ்சை காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
தஞ்சை மாவட்டம், சோழபுரத்தைச் சேர்ந்தவர் அசோக் ராஜன். 27 வயதான இவர் கடந்த 13ஆம் தேதி திடீரென மாயமானார். இது குறித்து அவரது பாட்டி காவல் துறையில் புகார் அளித்தார்.
காவல்துறை மேற்கொண்ட தீவிர விசாரணையின்போது அசோக் ராஜனை சித்த வைத்தியர் கேசவ மூர்த்தி கொலை செய்தது தெரிய வந்தது. தன்னிடம் சிகிச்சை பெற வந்த அசோக் ராஜனை இவர் கொலை செய்த பின்னர் துண்டுத் துண்டாக வெட்டி உறுப்புகளை வெளியில் எடுத்து விட்டு உடலை தன் வீட்டிற்கு பின்புறம் புதைத்துள்ளார் கேசவ மூர்த்தி.
ஆண்மை குறைவுக்கு சிகிச்சை அளப்பதாக கூறி சில இளையர்களை அவர் தனது பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தியதும் அம்பலமாகியுள்ளது.
இரண்டாடுகளுக்கு முன்னர் அனஸ் என்ற இளையரையும் அவர் கொன்று இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. சித்த மருத்துவர் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இந்நிலையில் அவர் தமது டைரியில் 194 பேரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளதாகவும் அவர்களில் பலருடைய உடல் உறுப்புகளை அவர் விற்பனை செய்து இருக்கக்கூடும் என்றும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பா.ம.க. பிரமுகர்கள் சிலர் இவ்வாறு புகார் அளித்துள்ளனர்.
தனியார் மருந்து கடைகளில் போதை மாத்திரைகளை வாங்கியுள்ளார் கேசவ மூர்த்தி. மேலும் தன் தோட்டத்தில் கஞ்சா செடியையும் வளர்த்துள்ளார். மாத்திரையைப் பொடியாக்கி, அதில் கஞ்சா கலந்து விற்பனை செய்துள்ளார்.
இந்நிலையில் அவரிடம் விசாரணை நடத்துவதை சிலர் தடுக்கின்றனர் என்றும் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
கேசவ மூர்த்தி, தமிழக அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளுக்கு சென்று அவர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.