சென்னை: தமிழகத்தில் போதைப் பொருள்களின் புழக்கத்தை தடுக்க வேண்டுமானால் உடனடியாக 20,000 காவலர்களை தற்காலிகமாக நியமிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது தமிழ்நாடு கஞ்சா மாநிலமாக மாறி வருகிறது என ராணிபேட்டையில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
தமிழக முதல்வர் சர்வாதிகாரியாக மாறி கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதை பொருட்களையும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அன்புமணி, கஞ்சா வணிகமானது தமிழ்நாட்டில் மிக பெரிய சமூகச் சீரழிவையும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவையும் ஏற்படுத்தி வருவதாகக் கவலை தெரிவித்துள்ளார்.
போதைப்பொருட்களை தனிப்பிரிவு அமைத்தாவது தடுத்தாக வேண்டும் என பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகச் சுட்டிகாட்டிய அவர், முதல்வரை நேரில் சந்தித்தபோதும் இந்தக் கோரிக்கையை தாம் வலியுறுத்தியதாகக் கூறினார்.
“மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தமிழக அரசு கூறுவதை வரவேற்கிறோம். ஆனால் இதற்காக 50 லட்சம் கையெழுத்துகளை வாங்கினால் அந்தத் தேர்வு ரத்தாகிவிடுமா என்று யோசிக்க வேண்டும். திமுக முதலில் தனது தேர்தல் அறிக்கையை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டும்.
“காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மூன்று இளையர்கள் கஞ்சா உட்கொண்டு விட்டு காவலர் ஒருவரைக் கத்தியைக் காட்டி விரட்டி அடித்துள்ளனர். இத்தகைய சம்பவங்கள் கவலையை ஏற்படுத்துகின்றன,” என்று அன்புமணி ராமதாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.