சென்னை: குடிமைப் பணிக்கான தேர்வுகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற தேர்வுகளை அரசியல் சாசனத்தின் எட்டாவது பட்டியலில் உள்ளதுபோல் 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிக்கான தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்துவதால் வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு மறுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்தத் தேர்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அவர் தமது மனுவில் வலியுறுத்தி உள்ளார்.
இந்த மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, டிசம்பர் 6ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.