கோவை: பிரபல நகைகடையில் இருந்து 25 கிலோ நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து காவல்துறை தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
கோவை மாவட்டம் காந்தி புரம் நூறடி சாலையில் இயங்கி வருகிறது ஜோஸ் ஆலூக்காஸ் நகைக்கடை.
திங்கட்கிழமை அன்று அக் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் வழக்கம் போல் இரவு கடையை மூடிவிட்டு வீடு திரும்பியுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் கடையைத் திறந்தபோது ஊழியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
கடையில் வைக்கப்பட்டிருந்த 25 கிலோ தங்க நகைகள் மாயமாகி இருந்ததே இதற்கு காரணம். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் மேற்கொண்ட முதல் விசாரணை, ஆய்வின்போது குளிர்சாதன வென்டிலேட்டர் பகுதியில் துளையிட்டுக் கொள்ளையர்கள் கடைக்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் சாவகாசமாக நகைகளைக் கொள்ளை அடித்து, அவற்றை மூட்டை கட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.
கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தடவியல் நிபுணர்கள் சோதனைகள் மேற்கொண்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்து உள்ளது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவர் என்றும் அதிகாரிகள் கூறினர்.