சென்னை: தமிழ் நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடியிடம் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
நவம்பர்30ஆம் தேதி மீண்டும் முன்னிலையாகும்படி அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியிருந்த நிலையில், அவர் வியாழக்கிழமை (30-11-2023) காலை அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு முன்னிலையானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
அமைச்சா் க.பொன்முடி, கடந்த 2006-2011-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், கூடுதல் பொறுப்பாக கனிமவளத் துறையையும் கவனித்தாா். அப்போது அவா், விழுப்புரம் மாவட்டம் வானூா் அருகே பூத்துறையில் அமைக்கப்பட்ட செம்மண் குவாரி உள்பட 5 செம்மண் குவாரிகள் தனது மகன், உறவினா், பினாமி ஆகியோா் பெயரில் எடுத்து, விதிமுறைகளை மீறி நடத்தியதாக கூறப்படுகிறது.
அவ்வகையில், அரசுக்கு ரூ.28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கௌதம்சிகாமணி, உறவினர் கே.எஸ்.ராஜமகேந்திரம் உள்ளிட்டோர் மீது கடந்த 2012ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்தது.
இதைக் கொண்டு சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்த அமலாக்கத் துறை, பொன்முடிக்குச் சொந்தமான 7 இடங்களில் கடந்த ஜூலை மாதம் சோதனை செய்தது. இது தொடா்பாக அவரிடம் 2 நாள்கள் விசாரித்தனா்.
செம்மண் முறைகேடு மூலம் ஈட்டிய பணத்தை கள்ளப் பரிவா்த்தனைகள் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும், சோதனையில் முக்கிய ஆவணங்களும், ரூ. 13 லட்சம் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட ரூ. 81,70,000 பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ரூ. 41.90 கோடி வங்கி நிரந்தர வைப்புத் தொகை முடக்கப்பட்டதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

