கோயம்புத்தூர்: கோவை காந்திபுரத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் முகமூடி அணிந்த கொள்ளையர் ஒருவர், அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 200 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.
கொள்ளையனைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில், கோயம்புத்தூர் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 200 பவுன் நகைகளை காவல்துறையினர் தற்போது மீட்டுள்ளனர்.
கொள்ளையில் ஈடுபட்டது தர்மபுரி மாவட்டத்தின் அரூரை சேர்ந்த விஜயகுமார் என தெரியவந்துள்ளது.
வீட்டில் பதுக்கி வைத்திருந்த நகைகளை விஜயகுமாரின் தாயாரிடம் இருந்து காவல்துறை அதிகாரிகள் மீட்டனர்.
கொள்ளையடித்த விஜயகுமார் இன்னும் தலைமறைவாக இருந்து வருகிறான். விஜயகுமாரைத் தனிப்படை காவல்துறையினர் தர்மபுரியில் முகாமிட்டு தேடி வருகின்றனர். விஜயகுமாருக்கு தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.