சென்னை: சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய ஏரியாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு 3,098 கன அடியாக அதிகரித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பைக் கருதி புதன்கிழமை 1,500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை உபரி நீர் திறப்பு 2,429 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து உபரி நீர் திறப்பு 6,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால், உபரி நீர் வடிந்து செல்லும் ஆற்றங்கரையில் உள்ள சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.