சென்னை: கச்சா எண்ணெய்க் கழிவு நீர் கடலில் கலந்ததைக் கண்டித்து அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன் படகில் சென்று போராட்டம் நடத்தினார். இப்போராட்டத்தில் அக்கட்சியினரும் மீனவர்களும் பங்கேற்றனர்.
“எண்ணூர் எண்ணெய்க் கசிவால் கடல்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்,” என்பதை வலியுறுத்தி எண்ணூர் கடல்பகுதிக்குப் படகில் சென்று அதிமுகவினர் நூதனப் போராட்டம் நடத்தினர்.
எண்ணூர் நெடுக்குக்குப்பம் பகுதியில் ஒரு வாரமாக எண்ணெய்க் கழிவுகளை அகற்றாததைக் கண்டித்து அப்பகுதி மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
“மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவது ஒருபுறம் இருந்தாலும் தொழில் நிறுவனங்களில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கினால்தான் இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிட்டும்.
“கடலிலும் நிலப்பரப்பிலும் படிந்துள்ள கச்சா எண்ணெய்யை அகற்ற அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் அதிமுக சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும்,” என்று போராட்டம் நடத்திய அதிமுகவினர் கூறியுள்ளனர் .
மிச்சாங் புயல் காரணமாக கடந்த ஒரு வாரத்துக்கு முன் பெய்த கனமழையின்போது தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவுகள் கொசஸ்தலை ஆறு, எண்ணூர் கழிமுகம், திருவொற்றியூர், நெட்டுக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு மீனவப் பகுதிகளிலும் பரவி, கடலில் சென்று சேர்ந்து 20 கிலோ மீட்டர் சுற்றளவுக்குக் கழிவுகள் படிந்து காணப்படுகிறது.
இதனால், அப்பகுதிகளில் மீன்கள் செத்து மிதக்கின்றன. மீனவர்கள் மீன்பிடிக்க முடியாத சூழலும் நிலவுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
கடலில் எண்ணெய்க் கசிவு சூழ்ந்துள்ள இடங்களில் அதனை அகற்றும் பணியில் தமிழக அரசு ஒருபுறமும் இந்தியக் கடலோர காவல்படை மறுபுறமும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.