திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருவரங்கம் கோயிலுக்கு வந்துசெல்லும் ஏராளமான பக்தர்களின் வசதிக்காகவும் அங்கு வசிக்கும் உள்ளூர் மக்களின் வசதிக்காகவும் அங்கு பேருந்து நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
திருவரங்கத்தில் இதுவரை உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகள், சுற்றுலாப் பேருந்துகளுக்கு என தனியாக பேருந்து நிலையம் எதுவும் இல்லை.
வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து அங்கு வரும் சுற்றுலாப் பேருந்துகள் யாவும் சாலையோரமாகவே நிறுத்திவைக்கப்படுகின்றன. அதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
திருவரங்கத்தில் பேருந்து நிலையம் கட்டுவதற்கு அவ்வூர் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை *விடுத்து வருகின்றனர்.
இப்போது, அங்கு அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், பேருந்து நிலையம் கட்டுவதற்கு தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது.
அதையடுத்து, மாநகராட்சிக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் கட்டப்படும் பேருந்து நிலையம் திருவரங்க அரசு மருத்துவமனைக்கு எதிரில் அமையவிருக்கிறது. பேருந்து நிலையம் அமைக்கும் பணி துவக்க விழாவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.