சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்துகளை முடக்கவேண்டிய அவசியமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், அவர் நிம்மதி அடைந்துள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு குறித்து வியாழக்கிழமை தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அப்போது, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறையும் ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் அமைச்சர், எம்எல்ஏ பதவிகளைப் பொன்முடி இழந்துள்ளார்.
இந்நிலையில், மேல்முறையீடு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தண்டனை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நடந்த சொத்துக்குவிப்பு வழக்கின்போது, பொன்முடியின் சொத்துகளை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்திருந்த நிலையில், பொன்முடி சொத்து களை மீண்டும் முடக்கவேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், “சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சொத்துகளை தற்போதைய சூழலில் மீண்டும் முடக்க வேண்டிய அவசியம் இல்லை.
“சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு தவறாக இருந்தாலும் தற்போது அதை மாற்ற முடியாது. தேவைப்பட்டால் சட்டத்திற்கு உட்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்,” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வழக்கு குறித்து பொன்முடி ஆலோசனை நடத்தினார். ஆனால், இதுகுறித்த விவரம் தெரிய வரவில்லை.
வழக்கின் பின்னணி:
கடந்த 2006ல் திமுக ஆட்சியின்போது, உயர் கல்வி மற்றும் கனிமவள அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார்.
2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குத் தொடர்ந்தது.
இவ்வழக்கில் இருந்து பொன்முடியையும் அவரது மனைவியையும் 2016ல் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து 2017ல் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இருவரின் விடுதலையையும் ரத்து செய்து, இருவரும் குற்றவாளிகள் என டிசம்பர் 19ல் தீர்ப்பளித்தது.