ஆதிச்சநல்லூர்: அண்மையில் பெய்த கனமழையில் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகமும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள தொல் பொருள்கள் வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்துள்ளன.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் மத்திய அரசின் சார்பில் ரூ.5 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.
அங்கு நடைபெற்ற அகழாய்வின்போது ஏராளமான தொல்லியல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் அந்த அரிய பொருள்களை முதற்கட்டமாக தற்காலிக அருங்காட்சியகம் ஒன்றை அமைத்து காட்சிப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், அண்மைய கனமழை இ்ந்த அருங்காட்சியகத்தையும் விட்டு வைக்கவில்லை.
ஆதிச்சநல்லூரில் உள்ள அகழாய்வுக் குழிகளை வெள்ள நீர் மூழ்கடித்துள்ளது. மேலும் அங்குள்ள முதுமக்கள் தாழி உள்ளிட்ட தொல்பொருள்களும் வெள்ளத்தில் சிக்கி உடைந்து சேதமடைந்துள்ளன.
அருங்காட்சியகத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுவரும் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளதாகத் தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இதனிடையே, சேதமடைந்த தொல்லியல் பொருள்களை இனி முறையாக பாதுகாக்க வேண்டும் என தொல்லியல் ஆர்வலர் முத்தாலங்குறிச்சி காமராசு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், தற்காலிக அருங்காட்சியகத்தை விரைவில் சீரமைத்து மீண்டும் பொதுமக்கள், மாணவ, மாணவியரின் பார்வைக்கு திறக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.