சென்னை: மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களில் 98 விழுக்காட்டினருக்கு நிவாரணத் தொகை கிடைத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் 5 லட்சம் பேர் நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் என்றும் அவர்களது விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு, உரிய வகையில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் செய்தியாளர்களிடம் கூறினார்.
தென் மாவட்ட மக்களுக்கும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
“மத்திய அரசிடம் இருந்து நிதி வரட்டும் என்று காத்திருக்காமல் மத்திய அரசு இன்னும் நிதி தரவில்லை என்று காரணம் சொல்லாமல் உடனடியாக நிவாரணத் தொகையைக் கொடுத்தோம்.
“இதனிடையே, தென்மாவட்டங்களிலும் மழை வெள்ளம் வந்தது. அந்த மக்களுக்கும் இழப்பீடு அறிவித்திருக்கிறேன். அவர்களுக்கும் விரைவில் கொடுக்கப் போகிறோம்.
“அந்த மக்களை நேரில் சந்தித்த போது அரசு இயந்திரம் உடனடியாகச் செயல்பட்டு எங்களைக் காப்பாற்றி விட்டது என்று சொன்னார்கள். அவர்களுடைய முகங்களில் மகிழ்ச்சியைப் பார்த்தபோதுதான் எனக்குக் கொஞ்சம் நிம்மதி வந்தது,” என்று முதல்வர் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சென்னையிலும் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் வெள்ளம் வந்தபோது மக்கள் அனைவருக்கும் அரசின் சார்பில் உண்மையான அக்கறையுடன் நிவாரணப் பொருள்களை உடனுக்குடன் வழங்கியதாகக் குறிப்பிட்ட அவர், அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை மக்களோடு மக்களாக களத்திலேயே இருந்து செயல்பட்டதாகத் தெரிவித்தார். எனினும், சிலர் தேவையின்றி குறை கூறுவதாக முதல்வர் குறிப்பிட்டார்.

