சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அதிமுக) நிறுவனருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் (எம்ஜிஆர்) 36ஆம் ஆண்டு நினைவு நாள் டிசம்பர் 24ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக கட்சியினர் எம்ஜிஆர் சிலைகளுக்கும் உருவப்படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், எம்ஜிஆர் நினைவு நாளில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரும் முன்னாள் முதல்வருக்கு மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து, எம்ஜிஆர் நினைவிட நுழைவாயில் அருகே எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

