சென்னை: தமிழகத்தில் மிச்சாங் புயல், கனமழையினால் சேதமடைந்த திருக்கோயில்களின் கட்டுமானங்கள் ரூ.5 கோடியில் சீரமைக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) ஆணையர் அலுவலகத்தில் புயல், கனமழையினால் பாதிக்கப்பட்ட திருக்கோயில்களைச் சீரமைப்பது குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட 26 திருக்கோயில்களில் சேதமடைந்துள்ள முன் அலங்கார மண்டபம், ஏகாதசி மண்டபம், படித்துறை மண்டபம், திருமதில்சுவர், வெளித்தெப்பம் சுற்றுச்சுவர் போன்ற கட்டுமானங்களைச் செப்பனிட்டு சீரமைக்கும் பணிகள் தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கட்டுமானங்களைச் சீரமைக்க சுமார் ரூ.5 கோடி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டு, அதன்படி, பணிகளைச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. இப்பணிகளை விரைந்து தொடங்கி முடித்திடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இதனிடையே, வரலாறு காணாத கனமழையால், பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு தென் மாவட்டங்களிலும் பழுதடைந்துள்ள சாலைகள், பாலங்களை நிரந்தரமாக சீரமைப்பதற்கு ஏதுவான திட்ட மதிப்பீட்டைத் தயார் செய்து, மூன்று நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் சந்திரசேகரிடம் கூறப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “மழை வெள்ளத்தால் நாகர்கோவில்-5, விருதுநகர்-13, தென்காசி-13, தூத்துக்குடி-113, திருநெல்வேலியில்-44 சாலைகளும் பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது,” எனத் தெரிவித்தார்.