தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் அண்மையில் பெய்த கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று பரவும் பயம் ஒருபுறம் இருக்க, எலிக் காய்ச்சல் பரவும் அச்சமும் இருப்பதால் இவற்றைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மழை வெள்ளத்தால் கடும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஏராளமான எலிகள் இறந்து தண்ணீரில் மிதக்கின்றன. லெப்டோபைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் என்பது எலியின் சிறுநீரில் இருந்து பரவுகிறது.
இதனால், எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால் அதனைத் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
நடமாடும் மருத்துவக் குழுவினர் ஆங்காங்கே மருத்துவ முகாம்களை நடத்தி, மக்களுக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
எலிக்காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் டாக்சிசைக்ளின் 100 எம்ஜி, பாரசிட்டமால் ஆகிய இரு மாத்திரைகள் தேவைப்படுபவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

