சென்னை: எச்ஐவி தொற்று, எயிட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம் சிறந்தமுறையில் செயலாற்றி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, எழும்பூரில் தமிழக எயிட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் சார்பில் ‘உலக எயிட்ஸ் தினம் 2023’ என்ற நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியபோது, “உலகளவில் 3.9 கோடி பேரும் இந்திய அளவில் 23.48 லட்சம் பேரும் தமிழகத்தில் 1.30 லட்சம் பேரும் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“எச்ஐவி பாதிப்பு இந்திய அளவில் 0.24 விழுக்காடாகவும் தமிழகத்தில் 0.17 விழுக்காடாகவும் உள்ள நிலையில், எயிட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் எச்ஐவி தொற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் திறன்பட செயலாற்றி வருகிறது.
“2022-23ஆம் ஆண்டில் எச்ஐவி தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த முறையில் செயல்பட்டதற்காக தமிழகத்துக்கு முதலிடம் வழங்கியுள்ளது மத்திய அரசு.
“1994ல் தமிழக எயிட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் தொடங்கியது முதல் இப்போதுதான் இந்த முதல் விருது பெறப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.
சுகாதாரத் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறும்போது, “இந்திய அளவில் எயிட்சைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
“கடந்த 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 72.5 விழுக்காடு பாதிப்பை கட்டுப்படுத்தி உள்ளோம். மேலும், 89 விழுக்காடு உயிரிழப்பும் தடுக்கப்பட்டுள்ளது.
“வரும் 2030ஆம் ஆண்டுக்குள் முழுமையாக எச்ஐவி, எயிட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது,” என்றார்.