சென்னை: தமிழகத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஒருவர் தொற்றுப் பாதிப்பால் மாண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வியாழக்கிழமையன்று 158 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்தது.
சென்னையில் 16 பேர், கோவையில் 3 பேர், நீலகிரி, ராணிப்பேட்டை, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டது.
மாநிலம் முழுவதும் தொற்றுப் பாதிப்பில் இருந்து 24 பேர் குணமடைந்துள்ளனர்.
சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது. நீண்ட நாள்களாக கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏற்படவில்லை.
இந்நிலையில் ராணிப்பேட்டையைச் சேர்ந்த 55 வயதான லட்சுமி என்ற பெண்மணி சிகிச்சை பலனின்றி தொற்றுப் பாதிப்பால் உயிரிழந்துவிட்டார்.
தமிழக அண்டை மாநிலங்களில் கொரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது.