திண்டுக்கல்: லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகியுள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவலை ஜனவரி 11ஆம் தேதி வரை நீட்டித்து திண்டுக்கல் மாஜிஸ்டிரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதை அடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.
அரசு மருத்துவரிடம் ரூ.51 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கி உள்ளார் அங்கித் திவாரி. அவர் லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக பிடிபட்டார்.
இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அங்கித் திவாரியின் பிணை மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.
லஞ்சம் பெற்றதில் மற்ற அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதா என விசாரணை நீடித்து வருகிறது.

