வேலூர்: சாலை விபத்தில் பலியான 13 வயதுச் சிறுவனின் உடல் உறுப்புகளை அவனது பெற்றோர் தானமாக வழங்கி உள்ளனர். இதையடுத்து அக் குடும்பத்தாரை பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.
வேலூர் மாவட்டம் கொள்ளக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சௌந்தரராஜன், தனலட்சுமி தம்பதியினரின் இளைய மகன் சந்தோஷ் (13 வயது).
அரசுப் பள்ளியில் படித்து வந்த சிறுவன் சந்தோஷ் கடந்த 28ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றான். அப்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கிப் படுகாயம் அடைந்த சந்தோஷ், ராணிப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறுவன் சந்தோஷ் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோரும் குடும்பத்தாரும் கதறி அழுதனர். எனினும் பின்னர் மனதை தேற்றிக் கொண்டு சந்தோஷின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வந்தனர்.
இந்த முடிவை அடுத்து சந்தோஷின் நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், ஆகிய உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் சிலருக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்று சிறுவனின் பெற்றோரை மருத்துவர்கள் பாராட்டினர். சமூக ஊடகங்களிலும் இத்தகவல் பரவியதை அடுத்து சந்தோஷின் பெற்றோரை அனைவரும் முன் மாதிரியாக கொள்ள வேண்டும் என பலர் பதிவிட்டுள்ளனர்.