சென்னை: புதிய வகை கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்த அவர், தமிழகத்தில் ‘ஜே.என்.1’ வகை கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் தொடர்ந்து கண்காகணிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
“புதிய கொரோனா உருமாற்றமானது அதிக அளவிலான கூட்டு பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. இணை நோய் உள்ளவர்கள், குழந்தைகள், முதியவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா தொற்று குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை,” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
இதற்கிடையே தமிழகத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தொற்றுப் பாதிப்பால் மாண்டுவிட்டார்.
வெள்ளிக்கிழமையன்று 331 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் சென்னையில் 25 பேர், செங்கல்பட்டில் 6 பேர், காஞ்சிபுரத்தில் 4 பேர், திருவள்ளூரில் 2 பேர், கோவை, நாமக்கல், சேலம், ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
வெள்ளிக்கிழமை 23 பேர் தொற்றுப் பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 172ஆக உயர்ந்துள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தமிழக எல்லைகளில் கொரோனா பரிசோதனை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்று அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.