சென்னை: சென்னையில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், கோவில்களுக்கு ‘கியூஆர்’ குறியீடு வழி பக்தர்கள் நன்கொடை செலுத்தும் வசதியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.
அத்துடன், இணையத் தளம் வழியாக 7,233 கோவில்களுக்கு நன்கொடை செலுத்தும் வசதியையும் அவர் தொடங்கி வைத்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, “இணையத்தளம் வழி கோவில்களுக்கு நன்கொடை செலுத்தும் வசதி 2021ஆம் ஆண்டு 47 கோவில்களில் அறிமுகமானது. இரண்டு ஆண்டுகளில் ரூ.5.61 கோடி நன்கொடை பெற்றுக்கொண்டதை அடுத்து, இப்போது 7,233 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
“நன்கொடை வழங்கியதற்கான மின்னணு ரசீது, வருமான வரிச் சலுகைச் சான்றிதழ் ஆகியவை குறுஞ்செய்தி வழி நன்கொடையாளருக்கு அனுப்பி வைக்கப்படும். அவற்றைப் பயன்படுத்தி, ரசீது மற்றும் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்,” என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

