சென்னை: அமைச்சர்களுக்கு எதிரான ஊழல், சொத்துக்குவிப்பு உள்ளிட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 2) முதல் விசாரிக்க உள்ளார்.
கடந்த திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களில் அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளன. இதனால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.
அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வளர்மதி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக முன்வந்து அந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்து இருந்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டது தொடர்பான தீர்ப்பின் நகலைப் படித்த பின்னர் மூன்று நாள்களாக தாம் தூங்கவில்லை எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சுழற்சி முறையில் மூன்று மாதங்களுக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு இவர் மாற்றப்பட்டார்.
தற்போது மூன்று மாதங்கள் முடிவடைந்த நிலையில், இவர் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து முன்னாள், இந்நாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை இவர் மீண்டும் விசாரிக்க உள்ளார்.

