தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிளாம்பாக்கத்தில் ரயில் நிலைய பணிகளைத் துரிதப்படுத்த ரூ.20 கோடி வழங்கப்படும்

2 mins read
2bfcab4d-2a3f-4d57-8d47-73f1a340ad65
படம்: - தமிழக ஊடகம்

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஒட்டி அமையவிருக்கும் ரயில் நிலையத்தின் பணிகளை துரிதப்படுத்துவதற்கு சிஎம்டிஏ சார்பில் ரயில்வே துறைக்கு ரூ.20 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

புதிதாகத் திறக்கப்பட்டுள்ள சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அமைச்சர் சேகர்பாபு வியாழக்கிழமை ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “இன்று 6வது நாளாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. தினம்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இந்தப் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். பயணிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படையான வசதிகளை அதிகாரிகள் தினமும் செய்து வருகின்றனர்.

“86 ஏக்கரில் உள்ள இந்தப் பேருந்து நிலையமானது இந்தியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் திட்டமிடப்பட்ட காலத்தையும், பயன்பாட்டுக்கு வந்த காலத்தையும் பார்த்தால் போக்குவரத்து அதிகமாகியுள்ளதைப் பார்க்க முடியும்.

“பேருந்து நிலையத்தைத் திட்டமிடும்போது அடுத்து வரும் 50 ஆண்டுகளுக்குத் தேவையான அளவுக்கு அனைத்து பணிகளையும் நிறைவேற்றியிருக்க வேண்டும். 2013ஆம் ஆண்டு இந்த பேருந்து நிலையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டு, 2018ல் ஒப்பந்தம் கோரப்பட்டு, 2019ல் பணிகள் தொடங்கப்பட்டிருந்தாலும், 30 விழுக்காட்டு பணிகளே முடிந்திருந்தது. மீதமுள்ள பணிகளையும், பல அடிப்படை வசதிகளையும் நாங்கள் உருவாக்கினோம். பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்தவுடன் சிறிய பிரச்சினைகள் கூட கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு முழுவீச்சில் அவை நிறைவேற்றப்பட்டு வருகிறது. 

“கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஒட்டி அமையவிருக்கும் ரயில் நிலையத்தின் பணிகளை துரிதப்படுத்துவதற்கு சிஎம்டிஏ சார்பில் ரயில்வே துறைக்கு ரூ.20 கோடி வழங்கப்பட்டுள்ளது. ரயில் நிலைய பணியை துரிதப்படுத்த ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளோம்.

பேருந்து நிலையம் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும்போது விபத்து ஏற்பட்டுவிடாமல் இருக்க நடை மேம்பாலம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளை நிறுத்தும் வகையில் சென்னை முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் நிலையத்தை மார்ச் மாதத்துக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்