கோயம்புத்தூர்: வால்பாறை அருகே உள்ள பன்னிமேடு பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தாய் யானையைப் பிரிந்த குட்டி யானை ஒன்று தனியாகச் சுற்றித் திரிந்துகொண்டிருந்தது.
வனத்துறையினர் அதை மீட்டு, தாய் யானையுடன் சேர்த்தனர்.
பின்னர் ஆளில்லா வானூர்தி மூலமாக அந்தக் குட்டி யானை கண்காணிக்கப்பட்டது. தாய் யானையுடன் குட்டி யானை நடமாடிக் கொண்டிருந்ததைக் காண முடிந்ததாகக் கூறப்பட்டது.
அண்மையில், பன்னிமேடு எஸ்டேட் 2வது பிரிவு தேயிலைத் தோட்டப் பகுதிக்கு அருகில் தாய் யானையுடன் சிறிதுநேரம் அது விளையாடிக் கொண்டு இருந்தது.
பின்னர் தாய் யானை வனப்பகுதியில் உள்ள பாறையின் அருகே படுத்துக்கொண்டது. அப்போது தாய் யானையின் துதிக்கைக்குள், அரவணைத்த நிலையில் அந்தக் குட்டி யானை படுத்துத் தூங்கியது.
வழக்கமாக, பிரிந்து சென்ற குட்டி யானையை தாயுடன் சேர்க்கும்போது, சில தாய் யானைகள் குட்டியை சேர்த்துக்கொள்ளமாட்டா.
ஆனால் இந்தத் தாய் யானை, பிரிந்து மீண்டும் கூடிய தன் குட்டியுடன் ஒன்றாகச் சுற்றித்திரிவதும் விளையாடுவதும் அணைத்தபடி உறங்குவதுமாக உள்ளது கண்காணிப்பில் தெரியவந்துள்ளது. தாயும் சேயும் அணைத்தபடி உறங்கும் புகைப்படம் இணையத்தில் பரவிவருகிறது.