புதுடெல்லி: ஓர் அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
செந்தில் பாலாஜி அமைச்ச ராகத் தொடர்வதற்கு எதிரான மனு ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடியான நிலையில் மேல்முறையீட்டு வழக்காக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில்தான் வெள்ளிக்கிழமை (ஜனவரி 5) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
மேலும், ஓர் அமைச்சரை பதவியில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. செந்தில் பாலாஜி வழக்கில் உயர் நீதிமன்ற நடவடிக்கை சரியானதே. எனவே, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர தடையில்லை என்றும் உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
வழக்கின் பின்னணி
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர். பின்னர், மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு, அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனர். தற்போது, புழல் சிறையில் அவர் மீண்டும் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக அறிவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. செந்தில் பாலாஜியைப் பதவி நீக்கம் செய்து ஆளுநர் ரவி பிறப்பித்த உத்தரவை, சில மணி நேரங்களில் அவரே நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
தமிழக அரசின் அரசாணை மற்றும் ஆளுநரின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.எல்.ரவி என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில், “இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது குறித்து தமிழக முதல்வர்தான் முடிவெடுக்க வேண்டும். அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தார்மீக ரீதியாக சரியானது அல்ல,” எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

