சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப்பணம் அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை - பொருள் இல்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசாக அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர்களின் அடையாளமாக அனைத்து தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு பண்டிகை பொங்கல் திருநாளாகும். இந்த நன்னாள் அனைத்து தொழில்களுக்கும், ஏன் மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி உணவளித்து வரும் விவசாய பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகும். இது தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்படுகிறது என அரசு தெரிவித்துள்ளது.
பொங்கலையொட்டி வழங்கப்படும் பரிசுத்தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை இடம் பெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலவச வேட்டி சேலைகளும் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனவே இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இலவச வேட்டி சேலைகளும் வழங்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது.
இதற்கிடையே பொங்கல் திருநாளை முன்னிட்டு மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை இம்மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக வரும் 10ஆம் தேதி அன்றே பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.