சென்னை: தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அக்கறையுடன் விசாரித்ததாக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லி சென்றிருந்த அவர், பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தில் நடைபெற உள்ள ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு அவர் பிரதமருக்கு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களைச் சந்தித்துப் பேசிய உதயநிதி, அதுகுறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
“காங்கிரஸ் தலைவர் சகோதரர் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். அப்போது சோனியா காந்தியிடம் நலம் விசாரித்தேன்.
“நாட்டின் மதச்சார்பின்மை நெறியை பாதுகாப்பதற்கான இண்டியா கூட்டணியின் முன்னேற்றம் குறித்தும் சுருக்கமாக விவாதித்தோம்,” என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததாகக் குறிப்பிட்ட அவர், டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தியது குறித்து கருத்து தெரிவிக்க இயலாது என்றார்.

