சென்னை: தமிழகத்தில் இஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மொத்தம் 1,353 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. சுமார் 6 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவசர மருத்துவ உதவிக்காக, தினமும் கட்டுப்பாட்டு அறைக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையின் செயல்பாடுகள் குறித்து அதன் மாநிலத் தலைவர் செல்வகுமார், மண்டலத் தலைவர் முகமது பிலால் ஆகியோர் பேசினர்.
“108 சேவையைப் பொருத்தவரை சென்னை உட்பட பல மாவட்டங்களில் இருந்து அழைப்பு வந்த 7 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கும் வகையிலான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதற்காக விபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகள், முக்கிய இடங்கள், சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில்ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
“கடந்த ஆண்டில் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் 1,919,504 பேர் பயனடைந்துள்ளனர். அதில் பிரசவ சிகிச்சைக்காக மட்டும் 507,071 சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை தவிர, சாலை விபத்துகளில் சிக்கிய 334,527பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 1.19 லட்சம் இதயநோயாளிகளும், 33,000 குழந்தைகளும் பயனடைந்துள்ளனர்,” என அவர்கள் தெரிவித்தனர்.