சென்னை: திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது எனப் பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் ஜெகதீஷ் பாராட்டியுள்ளார்.
தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து தஞ்சையில் நடைபெற்ற துணை வேந்தர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய ஜெகதீஷ், உயர் கல்வியில் தமிழ்நாடு சிறப்பான நிலையில் உள்ளது என்றார்.
தமிழகத்தில்தான் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயரியப் பல்கலைக்கழகங்கள் இருப்பதாக குறிப்பிட்ட அவர், ஐ.ஐ.டி உள்ளிட்ட மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களும் உள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
“தமிழ்நாட்டில் மிகச் சிறந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு, திறமையான மனித வளம் உருவாக்கப்படுவதால், தொழில் ரீதியாகவும் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது. இதன் காரணமாக இந்தியப் பொருளியல் வளர்ச்சியிலும் தமிழ்நாட்டின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது.
“இதனால் மாணவர்கள் சிறந்த திறனைப் பெறும் வகையில் நம்முடைய கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது,” என்றார் ஜெகதீஷ்.
உலக அளவில் கல்வித் துறை போட்டி நிறைந்ததாக உள்ளது என்றும் உலகளாவிய பல்கலைக்கழகங்களின் தரத்துக்கு இணையாக இந்தியக் கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.