சென்னை: வியட்னாமைச் சேர்ந்த ‘வின்ஃபாஸ்ட்’ நிறுவனம் தமிழகத்தில் 16 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
தூத்துக்குடியில் மின்சார வாகன உற்பத்தி ஆலையை நிறுவ உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்திருப்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
இந்த முதலீட்டின் வழி சுமார் 3,500 வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘வின்ஃபாஸ்ட்’ தொழிற்சாலைக்கான கட்டுமானப்பணிகள் இந்த ஆண்டிலேயே துவங்கும் என்றும் அங்கு ஆண்டுக்கு 150,000 மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே சிங்கப்பூரிலிருந்து மட்டும் 31,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் தமிழகத்திற்கு கிடைக்க உள்ளதாக ஏசியாநெட் தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அடிடாஸ், போயிங் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் தமிழகத்தில் பெரிய முதலீடுகளைச் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் வாலியோ நிறுவனம், தமிழகத்தில் 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்து சென்னையில் தொடங்க உள்ள ஆலையின் மூலம் 3,000 பேர் வேலை வாய்ப்பு பெற உள்ளனர். இத்தகவலை அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆற்றல்மிகு மனித வளத்தின் மீது நம்பிக்கை கொண்டு பெரு முதலீட்டை மேற்கொள்ளும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு நன்றி தெரிவிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது ஒரு முதலீடு அல்ல என்றும் தென் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.