தூத்துக்குடி: ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த ஆட்டுக்குட்டியை தீயணைப்புப் படை வீரர் தலைகீழாக அக்குழிக்குள் இறங்கி காப்பாற்றினார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கடாக்சபுரம் என்ற கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அங்கு மூடப்படாமல் கைவிடப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் நாகராஜர் என்பவருடைய ஆடு தவறி விழுந்தது. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆட்டை மீட்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இந்நிலையில் தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி ஆட்டை மீட்க முயன்றனர். அம்முயற்சி தோல்வியடைந்தது.
இதையடுத்து தீயணைப்புப் படை வீரர் துரைசிங்கம் தனது இடுப்பிலும் காலிலும் கயிற்றைக்கட்டிக் கொண்டு ஆழ்துளைக் கிணற்றுக்குள் தலைகீழாக இறங்கினார். இரண்டு முறை மேற்கொண்ட முயற்சியை அடுத்து அந்த ஆட்டை அவர் பத்திரமாக மீட்டார். இது தொடர்பான புகைப்படங்களும் காணொளியும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படுகிறது.