மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை முன்னிட்டு, அனைத்து சமூகத்தினரையும் அழைத்து ஆட்சியர் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பேச்சு வார்த்தையை முழுமையாகக் காணொளிப் பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய ஊர்களில் அனைத்து சமூகத்தையும் சேர்த்து குழு அமைத்து ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுகிறது. இதேபோல, அவனியாபுரத்திலும் அமைக்க வேண்டும் என உயர்நீதி மன்ற மதுரை கிளையில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனு செவ்வாய்க்கிழமை (ஜன.,09) விசாரணைக்கு வந்தது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் ரூ.44.6 கோடி மதிப்பீட்டில் கிட்டத்தட்ட 66 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு மைதான பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி ஆகியோர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே, தமிழர்களின் வீர விளையாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு மைதானம் அமைய வேண்டும் என முதலமைச்சர் சட்டசபையில் அறிவித்தபடி 66 ஏக்கர் பரப்பளவில் ரூ.44.6 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளன என்று ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு எ.வ.வேலு கூறினார்.