சென்னை: தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சியாக சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 2014 தேர்தலைப் போல வரும் தேர்தலிலும் பா.ஜனதா கூட்டணியில் தேமுதிகவை சேர்க்க முயற்சித்து வருகிறார்கள். திங்கள் மாலையில் விஜயகாந்த் வீட்டுக்கு சென்ற பியூஷ்கோயல் பிரேமலதாவுக்கு ஆறுதல் கூறினார்.
பாஜக நிர்வாகிகள் கரு.நாகராஜன், காளிதாஸ், தேமுதிக நிர்வாகி பார்த்தசாரதி ஆகியோரும் உடன் இருந்தார்கள்.
பின்னர் பியூஷ்கோயல், பிரேமலதா, எல்.கே.சுதீஷ் ஆகிய மூவரும் தனியாக ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த சந்திப்பின்போது பாஜக கூட்டணிக்கு சில நிபந்தனைகளை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது. தொகுதி எண்ணிக்கை பற்றியும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
பொங்கலுக்குப் பிறகு கட்சியின் அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் சென்னை வர உள்ளார். அப்போது தமிழக நிர்வாகிகளுடனும் கலந்து பேசி தொகுதிகள் ஒதுக்குவது பற்றிய பேச்சுகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் தொகுதிப் பங்கீட்டில் தேமுதிக கறாராக இருந்தது. ஆனால் இப்போது கட்சி பலவீனம் அடைந்துள்ளது. ஏற்கெனவே தொகுதி வாரியாக ஒவ்வொரு கட்சியின் செல்வாக்கு பற்றி அண்ணாமலை தனியாக ஆய்வு நடத்தி புள்ளி விவரங்களுடன் பட்டியல் தயார் செய்து வைத்துள்ளார். அதன் அடிப்படையிலேயே தொகுதிப் பங்கீடு பற்றி முடிவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

