சென்னை: பொங்கல் பண்டிகையின்போது மாநிலம் முழுவதும் சுமார் 50,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், மக்கள் அதிகமாகக் கூடும் கடை வீதிகள், கோவில், சுற்றுலாத் தலங்களில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வண்ணம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
50,000 காவலர்களும் சுழற்சி முறையில் 24 மணி நேரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். ஏராளமான பொதுமக்கள் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்வதால் விபத்துக்கள், நெரிசல் ஏற்படாமல் தடுக்க நெடுஞ்சாலைகளில் காவல்துறையினர் சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பெண்கள், சிறார்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் டி.ஜி.பி. சங்கர் ஜிவால்.
அதே வேளையில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள், பெண்கள், சிறார்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

