மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிக்காக மதுரையில் அமைக்கப்பட்டுள்ள புதிய திடலுடன் கூடிய அரங்கிற்கு ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அந்த அரங்கத்தை இம்மாத இறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, திறப்பு விழாவில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் பங்கேற்க உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை 10,000 ரசிகர்கள் கண்டு ரசிப்பதற்கு ஏதுவாக பிரம்மாண்டமான தற்காலிக அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்தப் போட்டி நகர்ப்பகுதியில் நடப்பதால் அனைத்து ஏற்பாடுகளையும் மதுரை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாடிவாசல், கண்காணிப்புக் கருவிகளை நிறுவும் பணிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன.
இம்முறை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

