மதுரை: குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதால் கோயில் சொத்துகளைப் பாதுகாக்கும் பொறுப்பு நீதிமன்றத்துக்கும் அரசாங்கத்துக்கும் உள்ளது என மதுரை உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் பல்வேறு கோயில்களின் சொத்துகள், நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பான வழக்கை மதுரை உயர் நீதிமன்றக் கிளை விசாரித்து வருகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது கோயில் சொத்துகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் துரிதப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.
கோயில் சொத்துகளை மீட்க கூட்டுக்குழு அமைக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, இதுவரை சொத்துகள் மீட்கப்படாதது தமக்கு மிகுந்த மன வேதனை அளிப்பதாகத் தெரிவித்தார். வழக்கு விசாரணை நீடித்து வருகிறது.

