சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த சிறப்புப் பேருந்துகள் மூலம் 4.54 லட்சம் பேர் சொந்த ஊர் களுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஆண்டுதோறும், பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை களின்போது சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வசிப்பவர்கள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புவது வழக்கமாக உள்ளது.
இதையொட்டி தமிழக அரசு நூற்றுக்கணக்கான சிறப்புப் பேருந்துகளை ஏற்பாடு செய்யும். அந்த வகையில் சனிக்கிழமை இரவு வரை 7,474 பேருந்துகள் இயக்கப்பட்டன.
அவற்றின் மூலம் 4.54 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என்றும் அவர்களில் 2.20 லட்சம் பேர் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டனர் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை அன்று ஒரே நாளில் 2,210 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரே நாளில் இயக்கப்பட்ட பேருந்துகளின் ஆக அதிகமான எண்ணிக்கை இது என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.