மதுரை: மூன்று நாள்கள் தொடர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளதால் மதுரை மாவட்டம் முழுவதும் உற்சாகம் நிலவுகிறது.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளை மதுரை, அதன் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் ஒரு திருவிழாவைப்போல் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியைக்காண வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் ஆண்டுதோறும் வருகை தருகின்றனர்.
ஜல்லிக்கட்டையொட்டி மதுரை மாநகராட்சி சார்பாக ரூ.28.37 லட்சம் செலவில் விழா மேடை, பார்வையாளர்கள் மேடை, கண்காணிப்புக் கருவிகளை நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 1,500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவனியாபுரத்தில் திங்கட்கிழமை மாலை, ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டைக் காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இன்று பாலமேடு பகுதியிலும் நாளை அலங்காநல்லூர் பகுதியிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும்.
இதனால் மதுரை மாவட்டத்தில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் சுற்றுலாப் பயணிகளும் குவிந்துள்ளனர். மதுரை மாநகராட்சி ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள 150 பேர் கொண்ட மருத்துவக்குழு தயார்நிலையில் உள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் பதிவு இரண்டு நாள்களாக நடைபெற்றது. அதன் முடிவில், ஆயிரம் காளைகளும் 600 மாடுபிடி வீரர்களும் களமிறங்க டோக்கன்கள் வழங்கப்பட்டதாக பிபிசி தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
“இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதி மொழி ஏற்க, அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து போட்டியைத் துவங்கி வைத்தார். முதல் சுற்றில் 50 பேர் களமிறங்கினர்,” என்றும் அந்த ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சிறு வாக்குவாதங்களும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
ஜல்லிக்கட்டு திடலில் உள்ள வாடிவாசல் வழியே மாடுகளை அழைத்து வரும்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது மாட்டின் உரிமையாளர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்றபோது, மாட்டின் உரிமையாளர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
தடியடிக்குப் பின்னர் அங்கு சுமுக நிலை நிலவியதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.