பாலமேடு: 14 காளைகளை அடக்கி கார் வென்றவர்; 40 பேர் வரை காயம்

2 mins read
0494506d-be75-4dec-ae06-44b4dc5cd24b
வாடிவாசலில் இருந்து துள்ளி வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கினர். - படங்கள்: தமிழக ஊடகம்
multi-img1 of 2
காளையை அடக்கும் மாடுபிடி வீரர்.
காளையை அடக்கும் மாடுபிடி வீரர். - படங்கள்: தமிழக ஊடகம்

மதுரை: உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி செவ்வாய்க்கிழமை (ஜன.16) விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் 14 காளைகளை அடக்கி பிரபாகரன் என்பவர் முதல் பரிசான காரை வென்றார். பாலமேட்டில் 2020, 2022-ல் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதல் பரிசு வென்றவர் இவர்.

மதுரை ஜல்லிக்கட்டு திருவிழாவின் இரண்டாம் நாள் விழா செவ்வாய்க்கிழமை பாலமேட்டில் சிறப்பாக நடைபெற்றது. தைத்திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

பாலமேடு ஜல்லிக்கட்டு மஞ்சமலை ஆற்று வெளியில் நடைபெற்றதால், மிக விசாலமான களத்தில் வீரர்களும் காளைகளும் உற்சாகத்துடன் களமாடினர்.

இப்போட்டியில் விளையாட 3677 காளைகளும், 1412 வீரர்களும் முன்பதிவு செய்திருந்த நிலையில், சுமார் 900 மாடுகள் அவிழ்க்கப்பட்டன, 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

விசாலமான களத்தில் வீரர்களும் காளைகளும் உற்சாகத்துடன் களமாடினர்.
விசாலமான களத்தில் வீரர்களும் காளைகளும் உற்சாகத்துடன் களமாடினர். - படங்கள்: தமிழக ஊடகம்

வெற்றி பெறும் முதல் வீரருக்கும், காளைக்கும் பரிசாக தலா 1 காரும், இரண்டாம் வீரருக்கு பைக்கும், இரண்டாம் காளைக்கு கன்றுடன் பசு மாடும் பரிசாக வழங்கப்பட்டது. சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் 10 காளைகளை அடக்கி 2ம் இடத்தையும் கொந்தகையை சேர்ந்த பாண்டீஸ்வரன் தலா 8 காளைகளை அடக்கி 3ம் இடத்தையும் பிடித்தனர்.

சிறப்பாக விளையாடும் காளையர்களுக்கும், காளைகளுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்களும், பீரோ, டிவி, கட்டில் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக பொருட்களும் பரிசாக வழங்கப்பட்டன.

மொத்தம் 10 சுற்றுகளாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 9 சுற்றுகளின் முடிவில் மாடுபிடி வீரர்கள் 14 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 12 பேர், பார்வையாளர்கள் ஒன்பது பேர், காவலர்கள் மூன்று பேர் என மொத்தம் 40 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எண்மர் படுகாயமடைந்தனர்.

காளையை பிடிக்கும் மாடுபிடி வீரர்கள்.
காளையை பிடிக்கும் மாடுபிடி வீரர்கள். - படங்கள்: தமிழக ஊடகம்
மாடுபிடி வீரரை கீழே தள்ளிவிட்டு பறந்த காளை.
மாடுபிடி வீரரை கீழே தள்ளிவிட்டு பறந்த காளை. - படங்கள்: தமிழக ஊடகம்

பார்வையாளர்களுக்கு அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க இரண்டடுக்கு கம்புகள் வைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட எஸ்.பி தலைமையில் சிசிடிவி கேமரா கண்காணிப்புடன் 1,500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடத்தப்பட்டது. திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 750 ஜல்லிக்கட்டு காளைகளும் 550 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்
ஜல்லிக்கட்டுமதுரைதமிழ்நாடு